Saturday, August 19, 2006

யாழில் ஒரு வாரக் காலமாக நடைபெற்ற சண்டையில் 88 புலிகள் பலி

யாழ் குடாப் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மோதல்கள் காரணமாக 88 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையின் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவத் தரப்பில் 485 பேர் வரையில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படையால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக படகு கட்டும் துறைதான் பாதிக்கப்பட்டது என்றும் இலங்கை இராணுவத்தினர் கூறுவது போல புலிகளின் படகுகள் தாக்குதலுக்குள்ளாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்குடாப் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வது குறித்து செஞ்சிலுவை சங்கம் வைத்துள்ள திட்டத்தை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் இளந்திரையன் தெரிவித்தார்.

துப்பாக்கிகளிடம் தோற்றுப் போனவர்கள்...துப்பாக்கிகளிடம் காதல் செய்பவர்கள்...

கேதீஸ்வரன் லோகநாதன் சென்ற சனிக்கிழமை (12.08.2006) இரவு 9:30 மணியளவில் அவரின் வீட்டில் வைத்து துப்பாக்கி நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கையில் இவ்வாறான கொலைகள் இன்று நேற்றல்ல, பல காலமாக மிக சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. இக்கொலைகளை யார் செய்கின்றார்கள் என்பதை விட எவ்வாறானவர்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பதும் தெளிவாகத் தெரியும். கொலை செய்வதன் மூலம் தங்கள் அரசியல் இலக்கை இலகுவில் அடைந்து விடலாம் என்று இன்னும் அவர்கள் நம்பிக்கிக்கொண்டிருப்பது தான் வேடிக்கையாக இருக்கின்றது.

கேதீஸ் ஒரு துப்பாக்கிதாரி இல்லை. மெலிந்த உருவமும், உடல் ரீதியாக பலம் குறைந்தவருமானவருக்கு துப்பாக்கி குண்டினால் ஆன சாவை எண்ணும் போது கொலைகாரர்களின் கோழைத்தனம் வெட்டவெளிச்சமாகிறது.

கேதீஸ் ஒரு புத்திஜீவி, அறிவாளி, தமிழர் பிரச்சினையில் அக்கறை கொண்ட மனிதன். இப்படி எத்தனையோ தமிழர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவ்வாறு கொல்லப்பட்ட பெரும்பாலான தமிழர்கள் யாரையும் சுட்டதில்லை, அல்லது குறைந்த பட்சம் அவர்களிடம் துப்பாகியும் இருந்ததில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு மனிதனின் ஆளுகைக்குள் கையகப்படுத்துவது வியப்பான ஒன்று. இதைத்தான் புலிகள் செய்கின்றார்கள். தனியொருவனின் கொள்கைக்கும், சிந்தனைக்கும் மாற்றாக இருப்பவனை கொலைசெய்யத்துணியும் கலாசாரம் எவ்வளது ஆபத்தான சமூத்தை உருவாக்கிவிடும் என்பதை இக் கொலைஞர்கள் அறியமாட்டார்களா?
இன்றைய தமிழ் சூழலில் துரோகிகள் பட்டம் மிகவும் அலசப்படவேண்டிய ஒரு விடையம். தனியொருவனின் சிந்தனைக்கு மாற்றாக இருக்கும் எவனும் துரோகியாக கணிக்கப்படுவது நமது தமிழ் சமூகத்தில் தான் காணப்படுகின்றது. அதுவும் இன்று உலகம் அறிவியலிலும், ஆராய்ச்சியிலும் முன்னேறிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் தமிழனின் சுருங்கிய சி;ந்தனை அவனை கீழ் நிலைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது.
இலங்கை தமிழ் சூழலிலே துரோகிகள் பட்டியலில் இருந்து கொல்லப்பட்டவர்களும், கொல்லப்பட இருப்பவர்களுக்கும், தமிழர் பிரச்சினையில் மிக நெருங்கிய தொடர்புகொண்டவர்கள். தமிழ் இனப்பிரச்சினையை கையில் எடுத்ததால் தமது சௌகரியங்களை கைநழுவ விட்டவர்கள். பல இன்னல்களையும், நெருக்கடிகளையும் தமதாக்கிக் கொண்டவர்கள். ஈழத்தமிழர் போராட்டத்தில் பல்வேறு பிரிவுகள், முரண்பாடுகள், தவறுகள் என்று பலவிதமான சிக்கல்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன, ஆனால் அவற்றைத் தீர்ப்பதற்கு துப்பாக்கி ரவைகள் அல்ல மூலப்பொருள்.

நூற்றுக்கணக்கான தமிழ் புத்திஜீவகளை தீர்த்துக்கட்டிய கொலையாளிகள் இன்று தமது இலக்கை அடைந்து விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. மாறாக அறிவுசார் தமிழ் இனம் அழிக்கப்பட்டதே மிச்சம். இருப்பவர்களும் துதிபாடிகளாகவே இருக்கின்றார்கள். பெரும்பான்மைத் தமிழர்கள் ‘மாடுமாதிரி வளந்தேன் சாமி, வணக்கம் ஒன்றும் தெரியா சாமி’ என்ற மந்தைகளாகவே இருக்கின்றார்கள். இன்னும் சில அல்லது சொற்ப மாற்றுக் கருத்தாளர்களும் குரல்வளை நசுக்கப்பட்டு ஈனக்குரலில் வலம் வருகின்றார்கள்.

ஐயோ தமிழினமே ஆண்டவன் வந்தாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது, துப்பாக்கிகள் மேல் காதல்; கொண்ட தமிழர்களிடம் இருந்து!