Sunday, February 05, 2012

சுய விமர்சனம் தேவை!


இலங்கையில் சமாதான முயற்ச்சி, நோர்வேயின் பங்கும், கருத்துப் பகிர்வும் உரையாடலும் என்ற நிகழ்வு அண்மையில் ரொரன்டோவில் நடைபெற்றது. இதை “தேடகம்” ஒழுங்குசெய்திருந்தனர்.

இதில் கலந்துகொண்டவர்கள் பலரும் தமது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்து கலந்துரையாடினார்கள். இந்தக் கலந்துரையாடல் குறிப்பிட்ட தலைப்பின் ஊடாக உரையாடப்பட்டிருந்தாலும், அதனுடன் தொடர்புடையதும், தொடர்பற்றதுமான பல விடயங்களும் பேசப்பட்டன என்பது உண்மை. முடிந்தளவிற்கு குறுகீடுகள் குறைவாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் பேசியவர்களில் அனேகமானவர்கள், நோர்வே தொடக்கம், மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் நேர்மையற்ற முறையிலேயே இலங்கை இனப்பிரச்சினையை கையாண்டார்கள் என்றும் அதிலும் நோர்வை கூட இந்த பிரச்சினையை மிகவும் உள்நோக்கத்துடன் நடந்துகொண்டது என்றும் பேசினார்கள். அத்தோடு தமிழர் பிரச்சினையில் புலிகளும் இதேபோன்ற அணுகுமுறையுடனேயே நடந்துகொண்டார்கள் என்பதையும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த உரையாடல்களை முழுவதுமாக பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றியது, இலங்கை இனப்பிரச்சினையில் நாம் எல்லோரும் தெளிவாகவும், சரியாகவும் இருப்பதாகவும், நேர்வே தொடக்கம், இந்தியா, ஏனைய ஐரோப்பிய நாடுகள் எல்லாம் எமது பிரச்சினையில் வஞ்சகத்தனமாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் நடந்து கொண்டது, நடந்துகொள்கிறது. என்ற அபிப்பிராயத்திலேயே பலரின் பேச்சுக்கள் இருந்தன. அது உண்மையும் கூட. ஆனால் இந்த யுத்த நிறுத்த காலத்திலும், சமாதான பேச்சுவார்த்தை காலத்திலும், தமிழர் தரப்பினரும் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதும் இங்கு விரிவாக ஆராயப்படவில்லை. ஒருவேளை “நோர்வேயின் சமாதான முயற்சியும் தமிழரும்” என்று தலைப்பிடப்பட்டிருந்தால் அது சாத்தியமாக இருந்திருக்குமோ என்னவோ?

இன்றைய சூழலில் நமது அரசியல், சமூக சிந்தனையில் சுயவிமர்சனம் செய்யப்படவேண்டும் என்று சொல்லுபவர்களின் கருத்துடனேயே நானும் ஒத்துப்போகிறேன். எமது இன்றைய பார்வையின் மீதே நாம் விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். காரணம் நாம் தொடர்ச்சியாக மற்றவர்கள் மீது குற்றம் சுமத்திப் பழக்கப்பட்டவர்களாக இருந்ததனாலும், எம்மீதான விமர்சனப்பார்வை எம்மிடம் இல்லாததினாலும் தான் நாமும், நமது சமூகமும் இன்றுள்ள நிலையில் இருக்கிறோம் என்பதும் எனது கருத்து.
“தேடகம்” இவ்வாறான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக கனடாவில் செய்துவருவது அரோக்கியமான விடயமே! பல்வேறு மாற்றுக் கருத்துக்கொண்டர்வர்களை ஒரே இடத்தில் உரையாடும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் தேடகத்தின் தேவை, தேவையே. உதாரணமாக நாடு கடந்த அரசாங்கத்தின் சபாநாயகர் பொன் பால்ராஜ் போன்றவர்களோடு கருத்துக்கள் பரிமாறப்படும்போது குறிப்பிட்ட கருத்துக்கள் இன்னொரு சூழலுக்கு கடத்தப்படுகின்றதையும், அல்லது அவர் போன்றவர்கள் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களின் சூழலுக்குள் வந்து உரையாடல்கள் நிகழ்த்தப்படுவது நல்ல சமிஞ்ஞையாகவே எனக்குப் படுகிறது.

அதே நேரம் அண்மையில் “யாரிந்தப் புத்தி ஜீவிகள்?” என்ற அறிக்கையை தாயாரித்து வெளியிட்டவர்களில் தேடக அமைப்பினரும் அடங்குவர். இந்த அறிக்கை தொடர்பாக தேடகத்தின் பங்கை விமர்சித்து அல்லது கேள்வி எழுப்பி முகப்புத்தகத்தில் பலரும் கருத்துச் சொல்லியிருந்தார்கள். அதன் பயனானக இன்று நடந்து முடிந்த கலந்துரையாடலுடன், “யாரிந்தப் புத்தி ஜீவிகள்? என்ற அறிகை தொடர்பாகவும் உரையாடுவதாகவும் தேடகம் தனது முகப்புத்தகத்தில் அறிவித்திருந்தது. ஆனால் அது தொடர்பாக தேடகம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது ஏமாற்றமே. இருந்தபோதும் நோர்வே தொடர்பான கலந்துரையாடல் முடிந்தபின்னர் ஆங்காங்கே சிலர் தேடகத்தின் அறிக்கை தொடர்பாக கதைத்தபோது, தேடகம் சார்பில் கதைத்தவர்கள், கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார்கள்
முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேற்றியபோது இந்த 71 புத்திஜீவிகளும் எங்கு போய்யிருந்தார்கள் என்றும், அதற்காக இந்த 71 பேரும் முதலில் முஸ்லீம் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற தொனியில் கருத்து தெரிவித்திருந்தார்கள். அத்தோடு 71 பெயர்களில் சில பெயர்களை குறிப்பிட்டு, குறிப்பாக பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார் என்றும், முஸ்லீம் மக்கள் புலிகளால் துரத்தப்பட்டதை, அன்றில் இருந்து இன்று வரை எதிர்ப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எமக்கில்லை என்பதை தேடக நண்பர்கள் கூறியதை கேட்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் என்னைப்பொறுத்தவரை முதலில் இந்த அறிக்கை தொடர்பாக தேடகம் கலந்துரையாடலை ஏற்படுத்தாததும், அல்லது ஏற்படுத்த முடியாதமைக்கான காரணத்தை தெரிவிக்காமையும் ஏமாற்றமே. அத்தோடு அந்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒருசிலர் மேல் தேடகத்திற்கு இருக்கும் விமர்சனத்திற்காக அந்த அறிக்கையை புறக்கணித்தது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாக கருதமுடியாது. அதில் கையெழுத்திட்ட தனிநபர்களுக்கப்பால் இன்றைய சூழலில் அந்த அறிக்கையில் சொல்லப்படும் விடயமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதே பிரதானமாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து.
தேடகம் போன்ற அமைப்பு பன்முகத்தன்மையை விரிவு படுத்தும் நோக்கில் செயற்படுகிறது என்ற கருத்தை அடிக்கடி தனது அறிக்கைகளில் வெளிப்படுத்துகின்ற காரணத்திற்காகவே, அவ்வறிக்கை தொடர்பாக தனது பார்வையை மீள்பார்வை செய்யவேண்டும் என்பதே என்போன்றவர்களின் கருத்தும் கூட. செய்வார்களா?